Tuesday, May 19, 2009

தாய் மனசு!


பழம்பொருள் சேகரிப்பாளனுக்கு விருது

பார்த்து மகிழ்ந்தாள் அவன் தாய்…

… அனாதை ஆசிரமத்து டி.வி.யில்!



கவிஞன் மனசு!


ஆடுகள் அழகாய் இருந்தன…

ரசிக்கத்தான் மனம் இல்லை…

நாளை குர்பானி!

ஆ…


‘உலகத்திலே

தலைசிறந்த நடிகர் சிவாஜிதான்’

மேடையில் பேசிவிட்டு

அமர்ந்தேன்.

மனசாட்சி

நக்கலாய் கேட்டது :

‘உன்னைவிடவா…?’

மனிதர்கள்


‘எந்தத்துண்டு எனக்கு?’

நண்பர்களுக்குள் சண்டை

தட்டில்… சுவையான புறா65!


முடியாது… முடியாது…

கடலின் ஆழத்தில்

புதைந்துபோன

டைட்டானிக் கப்பலை

கண்டுபிடித்தவனால்கூட

கண்டுபிடிக்க முழயாது…

பெண்ணின் மனதில் இருப்பதை!

நிஜங்கள்… நிழல்கள்…


விடுமுறைநாளில்

நண்பன் வீட்டுக்குச்

சென்றேன்.

காதில் ஹெட்போனை

மாட்டிக் கொண்டு

உற்சாகமாய்

சினிமா பாட்டு

கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆசையாய் பேச வந்த

குழந்தையை

‘சனியனே…

தொந்தரவு பண்ணாதே’

என்றான்.

‘மட நண்பா!

உன் குழந்தையிடம்

குழந்தையாய் பேசிப்பார்!

அதன் பேச்சு

நீ கேட்கும் இசையைவிட

இனிமையானது!’

ஞானோதயம்


வாழ்வின் இலக்கணம்

கற்றுக் கொண்டேன்…

எதிரில் சிலந்திவலை!


அதிசயம்

கர்ப்பம் தரிக்காமல்

குழந்தை பெற்றது…

குப்பைத்தொட்டி!


புரிதல்


ஜாதிக்கலவரம்

சிதறியது…

ஒரே இரத்தம்!

என் கேள்விக்கு என்ன பதில்?


துபாய்.

வியாழன் இரவு.

கையில் மதுப்புட்டியோடும்

வாயில் சிகரெட்டோடும்

ரூம்மேட் தர்க்கம் பண்ணினான் :

‘உலகத்தில்

ஆண்டவன் படைத்த எல்லாம்

நாம் ஜாலியாக இருப்பதற்குத்தான்…

இந்த மதுவும்கூட ஆண்டவன் படைத்ததுதான்!’

நான்

கடைசியாய் கேட்டேன் :

‘விஷத்தையும் ஆண்டவன் படைத்திருக்கிறானே…

அதையும் நீங்கள் பருக வேண்டியதுதானே?’


‘………………’

ஆண்டவன் பார்க்கிறான்!


துபாய் ஏ.சி. பஸ்ஸில்

நான் பயணம் செய்து

கொண்டிருக்கையில்,

பள்ளி அருகில்

புத்தகப்பையோடு

ஏறிய சிறுவனுக்கு

நான் எழுந்து

என் இருக்கையை

கொடுத்தேன்.


அதேநேரம்…

தமிழ்நாட்டில் திருச்சியில்

பஸ்ஸில்

புத்தகப்பையோடு

ஏறிய என் மகனுக்கு

யாரோ ஒருவர்

எழுந்து

தன் இருக்கையை

கொடுத்தார்.

விமர்சனம்


மேடையில்

எனக்கு பாராட்டுவிழா!

‘நல்லவன!;’

‘ஒழுக்கசீலன!;’

‘உத்தமன்’

‘ஏகபத்தினிவிரதன்!’

…. இன்னும் … இன்னும்…

பாராட்டு மழைகள்!

கழுத்தில் மாலையோடும்,

தோளில் சால்வையோடும்

வீட்டிற்கு வந்து

கர்வத்தோடு

கண்ணாடியைப் பார்த்தேன்.

உள்ளே தெரிந்த

என் மனசாட்சி அலறியது :

‘டேய்… வேஷக்காரா!’

பாவமன்னிப்பு


ஆடையில் சேர்ந்த

அழுக்கை

சோப்பு போட்டு

துவைக்க… துவைக்க…

சுத்தமானது ஆடை!

ஆன்மாவில் சேர்ந்த

அழுக்கை அகற்ற

எங்கே

சோப்பு கிடைக்கும்?


குர்ஆன் சொன்னது :

‘இறைவனிடம்

பிரார்த்தியுங்கள்!’

மனம் வருந்தி…

செய்த தவறுகளை

எல்லாம் உணர்ந்து…

மன்னிப்பை

வேண்டி…

ஆண்டவனிடம்

வேண்டுகிறேன்

என் மனதை

சுத்தமாக்க!

Friday, April 10, 2009

நினைவே ஒரு சங்கீதம்...!




இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத் தந்த
கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி வடாகத்திலும்
இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில் இல்லை
உயிரே...

அலுவலகத்திலும் சரி.. அறையிலும் சரி
இருபத்துநான்கு மணி நேரமும்
இங்கே AC இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி சுழலாமல்
ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க
Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்
இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும் இல்லை
என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில்
ஊர் சுற்றியபோது உண்டான ஆனந்தம்
இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை கண்டாலும்
நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச் சுவரில்
பென்சிலாலும் கரியாலும் கிறுக்கிய
அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை, நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....

உனக்குத் தெரியாது!


கண்காணிப்புகேமராவின் கண்களை
ஏமாற்றிவிட்டு திருடியதை
நினைத்து
கர்வப்படாதே நண்பா!

ஆண்டவனின்
மறுமைநாள் கேள்விகணக்கு கேமராவில்
உன் திருட்டு
துல்லியமாய் பதிவாகிவிட்டது!

Sunday, March 29, 2009

அழகிய பரிசு!





கண்மணி!

‘‘உங்கள் பிறந்தநாளுக்கு
என்ன பரிசு வேண்டும்?’’
என்று கேட்டாய்…

‘‘எனக்கு
ஆண்டவன் கொடுத்த
விலை உயர்ந்த பரிசே
நீதானடி
என் தேவதையே! ’’



அழகு!


அழகுசாதன திரவியங்கள்
எல்லாம் அழகாயின…
அவைகளை
நீ உன் முகத்தில்
தடவியபோது…


இடம்!


கண்மணி!

நகைக்கடையில்
அந்த தங்கமூக்குத்தியைப்
பார்த்தபோது
அது அழகாய் இருந்ததைவிட
அதை வாங்கி
உன் மூக்கில் போட்டு
பார்க்கும்போதுதான்
அது
ரொம்ப அழகாய் இருக்கிறது!




மச்சம்

காலதேவன்
உன் நிலா முகத்தில்
வைத்த திருஷ்டிப்பொட்டு!


ஒரே இனம்!

குழம்பு வைப்பதற்காக
நான் வாங்கி வந்த
உயிர்மீன்களை
நீ அறுத்தபோது
அவைகள் எல்லாம்
உன் கண்களைப் பார்த்து
கேட்டன…
‘‘மீனே இன்னொரு மீனை
கொல்லலாமா…?’’

தாய்… தாரம் …



பத்து மாசம்
சுமந்தவள்
தாய்!

வாழ்க்கை
முழுக்க சுமப்பவள்
தாரம்!




முடியாது!

உன்னைப் பற்றி
கவிதை எழுதச் சொன்னாய்..
எப்படி முடியும்…
கவிதையைப் பற்றி
கவிதை எழுத…!


போட்டி!

கண்மணி!

இரவில் வெளியே வராதே!
நிலா
பொறாமைப்படும்
உன் முகத்தைப் பார்த்து…


நிலா

கடவுள் எனும் கணவன்
வானமனைவியின்
நெற்றியில் வைத்த
குங்குமப்பொட்டு!

காகித தாஜ்மஹால்


நான்
மன்னன் ஷாஜஹான் அல்ல
சலவைக்கற்களால்
தாஜ்மஹால் கட்ட…

நான்
உன் ஏழைக்கணவன்…
நமக்கு
சொந்தமாய்
ஒரு ஓலைக்குடிசைகூட
இல்லைதான்…

ஆனால்…
என்னால்
அதைவிட பெரிய மஹால்
கட்ட முடியும்
சலவைக்கற்களால் அல்ல…
அதைவிட உயர்வான
அன்பினால்!




ஏன்?


உலக அதிசயங்கள்
எதுவும் எனக்கு அழகாய்
தெரியவில்லை…
மனசில் நீ!

தப்பு பண்ணி விட்டாயா…?

அன்பே!
நீ வைத்த
மீன் குழம்பில்
மசாலாவுக்கு பதில்
தேனை
தவறுதலாய்
கலந்து விட்டாயோ…
இனிக்கிறதே!

உயில்




நான்
உயில் எழுதுகிறேன்…
என் சொத்து…
என் அன்பு மனைவி!
என் ஆசைக் குழந்தைகள்!



உன் பதில்

எனக்கு
ஐஸ்வர்யாராய்
தேவ்யானி
சிநேகா
மீரா ஜாஸ்மீன்
பிடிக்கும்
என்றேன்.

நீ
அரவிந்தசாமி
அஜீத்
விஜய்
விக்ரம்
பிடிக்கும்
என்பாய்
என்றுதான்
நினைத்தேன்.

நீ சொன்ன பதில் …
‘‘எனக்கு உங்களை பிடிக்கும்’’
………………
வலித்தது….



சமையல் இரகசியம்!


இனியவளே!
எல்லாரும்தான் சமைக்கிறார்கள்…
ஆனால்…
உன் சமையல் மட்டும்
எப்படி இத்தனை ருசியாய் இருக்கு?
எனக்கோர் சந்தேகம்…
உள்ளங்கையில்
தேனை தடவிக் கொண்டு
சமைக்கிறாயோ…?

குயில் கூட்டம்



இனியவளே!
குயில்கள் முன்னே
பேசாதே!
அவைகள்
உன் குரலைக் கேட்டு
பொறாமைப்படும்…
‘‘இது எந்த நாட்டு
உயர்ஜாதிக்குயில்?’’
என்று…



வெளிநாட்டு வாழ்க்கை


நாங்களும்
தியாகிகள்தான்…
நாட்டிக்காக அல்ல…
வீட்டிற்காக
உறவுகளை எல்லாம் பிரிந்து
உணர்வுகளை கட்டுப்படுத்தி
கல்யாணமாகியும்
சந்நியாசிகளாய்…
பிரம்மச்சாரிகளாய்…
மரக்கட்டைகளாய்…
வாழும்
மனித பொம்மைகள்!

நான் சொல்வதெல்லாம் உண்மை!




இதயம் கவர்ந்தவளே!

உன்னைப் பார்த்து
பிரமித்து
‘அழகி!’
என்றேன்.

‘ஏய்ய்..
பொய் தானே?’
கன்னத்தில்
அதிர்ஷ்டக்குழிவிழ
சிரித்தாய்…

மயில் ஆடும்
என்பது பொய்யா…?

குயில் பாடும்
என்பது பொய்யா…?

மல்லிகை மணக்கும்
என்பது பொய்யா…?

சொல்… சொல்… சொல்…
- இதெல்லாம் பொய் என்றால்
நான் சொன்னதும் பொய்!




காணவில்லை…


அன்பே!

முதன்முதலாய்
உன்னைப் பார்க்கையில்
உன் கைகளைப் பார்த்து
குழம்பிப் போனேன்…

‘‘தேவதைகளுக்கு
சிறகுகள்
இருக்குமாமே!’’

காத்திருக்கிறேன் கண்மணி!




என் உயிரே!

என் மனவானில்
உன்னைப் பார்க்காத நாட்கள்
கறுப்பு அமாவாசைகள்…

உன் முகம் பார்க்கும் நாட்கள்
பிரகாசமான பௌர்ணமிகள்!

உனைப் பிரிந்து…
இந்தப் பாலைவனத்தில்
தினம் தினம்
கும்மிருட்டான
அமாவாசை இரவுகளைப்
பார்த்து …
பெருமூச்சுக்களோடும் …
ஏக்கத்தோடும் …
வேதனைகளோடும்…
விரக்தியோடும்…
… வாழும்
நான்
பௌர்ணமி நிலாவைப் பார்க்க
நெஞ்சு நிறைய கனவுகளோடு
காத்திருக்கிறேன்
கண்மணி!



குழந்தை!

அன்பே!

தாம்பத்யம்
எனும் பத்திரிக்கையில்
நாம் எழுதிய
காதல் கவிதை!

திருமணம்
எனும் ரோஜாச்செடியில்
முளைத்த
ரோஜா மொட்டு!

இளைப்பாறுதல்



வெளிநாடு…

கவலையை மறக்க
குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள்…

கலர்தோல் அழகிகளின்
ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்…

எடுப்பான பெண்கள்
இடுப்பை ஆட்டிஆட்டி ஆடும் பெல்லி டான்ஸ்;…
…………… எல்லாம்
உண்டாம்.


நான் கவலைகள் மறக்கும் இடம்
நீ எழுதிய அன்பு மடல்களும்,
என் பர்ஸில்
புன்னகைக்கும்
நம் குழந்தைகளின் போட்டோக்களும்,
உங்கள் நினைவுகளை
அசைபோட்டபடி
பேரீச்சம்பழ மரங்கள் நிறைந்த ப+ங்காக்களில்
தனியே நடக்கும் தருணங்களும்,
அலுவலக களைப்போடு
இரவுகளில் அயர்ந்து தூங்கும்போது
நீயும், குழந்தைகளும்
வரும் இனிய கனவுகளும்!

ஆண்டவனிடம் ஒரு கருணை மனு!



ஆண்டவா!

சின்னவயசில் படித்த
மாயாஜால கதைகளில் வரும்
மந்திரக்கம்பளம்
எனக்கு வேண்டும்!

ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி
இந்தப் பாலைவனத்தில் வாழும்
நாங்கள்
மந்திரக்கம்பளத்தில் ஏறி
சொந்த நாட்டிற்குச் சென்று
மனைவி, குழந்தைகள்
முகத்தை பார்த்துவிட்டு
விடிவதற்குள்
வந்து விடுகிறோம்…

நாளை காலை
ஆபீஸ் போக வேண்டும்!



புரிதல்

என் பெயர்
அழகு
என்று புரிந்தது…
உன் உதடுகள் உச்சரித்தபோது!



அக்கறைவயல் வரப்பில்

மென்மையான புல்வெளியில்
நீ நடந்தபோது
கவலைப்பட்டேன்…
உன்
மிருதுவான பாதங்களை
புற்கள்
காயப்படுத்தி விடுமோ…?




ரசனை

கண்மணி!
நைல் கட்டரில்
நீ
வெட்டிப்போட்ட
உன்
நகத்தில்
பார்த்தேன்…
பிறைநிலாவை!

மென்மை



அன்பே!
பட்டுப்போன்ற
இலவம் பஞ்சு மெத்தையில்…
அதைவிட
மிகமிக மென்மையான…
நீ!

திருத்தம்



பூ
இலேசானது
என்ற கருத்தை
மாற்றிக் கொண்டேன்…
உன்னைத் தொட்டபோது!

பேரழகு!



உன்னைவிட
அழகானது…
உன் வெட்கம்!

உறவு



அந்த அழகான பெண்
‘அண்ணா’ என்றழைத்தபோது
ஆனந்தமாயிருந்தது!
நினைவில்…
இறந்துபோன தங்கச்சி!

கண்டுபிடித்தேன்!



அன்பே!
உன் சுவாசக்காற்றுதான்
தென்றலோ?